Monday, February 25, 2008

மலேசிய ஆட்சி முறையில் மரபு வழிமுறை அம்சங்கள்


இன்றைய மலேசிய ஆட்சி முறைக்குப் பண்டைய மலாக்காவின் மரபுவழி ஆட்சி முறை அம்சங்களே அடிப்படையாக உள்ளன.

15-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் முதலாவது மலாய் ஆட்சி மலாக்காவில் தோன்றியது. பரமேஸ்வரா மலாக்காவை நிறுவி அதன் முதல் சுல்தான் ஆனார். அவர் ஓர் இந்து சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய சரித்திர புத்தகங்களில் பரமேஸ்வரா இஸ்லாத்தைத் தழுவினார் என்றே கூறப்பட்டு வந்தது.( அரசாங்க மாலாய்க்காரர்களின் ஆதிக்கம் வலுப்பெற சரித்திர விஷயங்கள் பல மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளன என்பது காலத்தால் மறக்கப்படலாம்! உண்மை மௌனத்தில் வாழ்கிறதோ! ) அடியேன், ஆரம்பக் கல்வி பயிலும் போதே இத்தகைய சரித்திரத்தைத் திரித்து எழுதும் வழக்கம் இருந்துள்ளதை காலம் கடந்து தெரியவரும் போது, கல்வியாளன் என்ற அடிப்படையில் மிக வருந்தினேன்.

பரமேஸ்வரா மலாக்காவை நிறுவியதின் வழி அதுவே முதல் மலாய் அரசு என்று எங்களூர் சரித்திரம் பகர்கின்றது! இருப்பினும், அன்றைய காலத்தில் மலாக்கா ஒரு வாணிக மையமாய் விளங்கியது. பல நாட்டு மக்கள் அங்கு வாணிகம் புரிய வந்தனர். அரேபியா, இந்தியா முதலான நாடுகளிலிருந்து அதிகமான முஸ்லீம் வியாபாரிகள் இங்கு வந்தனர். அதன் காரணமாக மலாக்காவின் அரசன் முஸ்லீம் ஆனான்; அங்குள்ள மக்களும் முஸ்லீம்கள் ஆனார்கள். இஸ்லாம் அங்கு ஆட்சி மதமாயிற்று.

அப்படியானால், அதற்கு முன்பு எத்தகைய ஆட்சி முறை இருந்திருக்கும் என்பதை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

அந்த காலக்கட்டத்தில், பல மொழிகள் பேசிய மக்கள் அங்கு வாணிகம் புரிந்தனர். மலாக்கா ஒரு முக்கிய வானிகத் தளமாக விளங்கிற்று. எனினும் மலாய் மொழியே பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருந்ததாகக் கூறப்பட்டுவருகிறது. எனினும், அம்மொழிக்கு குறிப்பிடத்தக்க வரிவடிவம் இல்லாதது வியப்பில் ஆழ்த்துகிறது. மலாய் மொழியின் தந்தை என்று போற்றக்குடிய முன்ஷி அப்துல்லா (Munshi Abdullah ) என்பவரின் பூர்வீகம் இந்தியா என்பதும் அவர் ஒரு தமிழர் என்பதும் சரித்திரத்தில் இருட்டடிக்கப்பட்ட உண்மை!

எது எப்படியிருந்தாலும், அன்று முதல் ( இடையே போர்த்துகீஸியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், ஜப்பானியர், மீண்டும் ஆங்கிலேயர்கள் போக) இன்று வரை மலாய் மொழியே பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் விளங்குகிறது.

இஸ்லாமிய செல்வாக்கு மலாக்காவில் பரவியவுடன் வாணிகமும் அதிகரித்தது. மக்கள் தொகை பெருகியது. எனவே சட்டமும் ஒழுங்கு முறையும் ஏற்படுத்தப்பட்டன. ஆட்சி நிர்வாகம் முறையாக நடைபெற சுல்தானுக்கு உதவியாகத் திறமைமிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் சுல்தானுக்கு உதவியாக இருந்து நல்லாட்சி புரிந்தனர்.

'பெண்டஹாரா' என்னும் பொறுப்பு வகித்த அதிகாரி சுல்தானின் நேரடி உதவியாளராக, ஆட்சிக் குழுவின் தலைவராக விளங்கினார். 'பெண்டஹரி' எனும் பதவியில் இருந்தவர் நிதியாளராக இருந்து பொருளாதாரத்தைக் கவனித்து வந்தார். 'தெமெங்கோங்' எனும் பதவி வகித்தவர் சட்ட திட்டங்களை அமல்படுத்தும் காவல்துறை அதிகாரியாக விளங்கினார். 'ஷா பந்தார்' என்னும் பதவி வகித்தவர் துறைமுக அதிகாரியாகவும், 'இலக்சுமணா' எனும் பதவி வகித்தவர் கடற்படைத் தளபதியாகவும் பொறுப்பேற்றுச் சுல்தானுக்கு உதவியாக ஆட்சி புரிந்துவந்தார்.

5 comments:

')) said...

இதே மாதிரி தான் இந்தோநேஷியாவிளுமா- type from google,sorry for spelling mistake.

')) said...

இந்தோனேசியாவில் மலேசியா போன்று அரசியல் அமைப்பு முறை இல்லை!

இங்கு சுல்தான்களும், பேரரசரும் மாநில அளவிலும் நாட்டின் அளவிலும் அரியணை அமர்ந்துள்ளனர்.இன்றும் அவர்களின் ஒப்புதல்களுடனே நாடாளுமன்றம், மற்றும் சட்டமன்றங்கள் நடைபெறுகின்றன. நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிப்பவர் பேரரசரே ஆவார். அவரே இராணுவப் படைத் தலைவரும், இஸ்லாமிய மதப் பாதுகாவலரும் ஆவார்.

இந்தோனேசியாவில் அப்படி இருப்பதாக தெரியவில்லை!

')) said...

நல்ல அரியத் தகவல்கள்...

')) said...

I meant- the change in religon?

')) said...

வடுவூர் குமார்,

இந்தோனேசியாவில் முன்பு 'ஸ்ரீ விஜயா' சாம்ராஜ்யம் இருந்ததை அறிவீரா?

இன்றும் பாலியில் இந்து சமயம், அங்கு வாழும் மக்களால் முறையாக பூஜைகள் ஆலயங்களில் நடைபெற்று வருகின்றது.

இந்தோனேசியாவில் மகாபாரதம், இராமாயணம் எல்லாம் பிரசித்திப் பெற்றவை!