Tuesday, February 26, 2008

மலாயா சரித்திரம்


மலேசியா என்று வழங்கப்படுவதற்கு முன்பு மலாயா என்றுதான் அழைத்தனர். கொஞ்சம், சரித்திரம் காண்போமா ? மலாயாவை ஆட்சி செய்தவர்களுக்கு பல காரணங்கள் இருப்பினும், முதன்மைக் காரணமாக இருப்பது அதன் இயற்கை வளம் என்றால் மிகையாகாது. மேலும் அதனால் கிடைக்கப்பெறும் வாணிப லாபம் என்றும் கூறலாம்.

ஏற்கனவே கூறியது போல், மலேசியா ( மலாயா ) இயற்கை வளம் மிகுந்தது. வரலாற்றுப் புகழ் பெற்றது. இங்கு வாசனைப் பொருட்கள் மிகுதியாகக்
கிடைத்தன. கிராம்பு, மிளகு, ஏலம்,பட்டை முதலியன வாசனைப் பொருட்களாகும். தங்கம், ஈயம் போன்ற உலோகப் பொருட்களும் கிடைத்தன.
இப்பொருட்களை வாங்குவதற்காக வந்த மேல் நாட்டவர் பலர் மலாயாவிற்கு வந்தனர். இங்குள்ள இயற்கை வளம் அவர்களைக் கவர்ந்ததால் அதைக்
தங்களின் உரிமையாக்கிக் கொள்ளவே மலாயாவை அவர்கள் கைப்பற்றினர்.
மலாயாவிற்கு முதலில் வந்த ஐரோப்பியர்கள் போர்த்துகீசியர்கள் ஆவர். அவர்கள் 1511இல் மலாக்காவைக் கைப்பற்றினர். 130 ஆண்டுகள் வரையிலான அவர்களுடைய ஆட்சிகளுக்குப் பிறகு மலாக்கா டச்சுக்காரர்களின் வசமாயிற்று.19ஆம் நூற்றாண்டு முதல்ஆங்கிலேயர்கள் மலாயாவைச் சிறுகச் சிறுகத் தங்கள் வசமாக்கினர்.

அந்நிய ஆட்சியாளர்கள் மக்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. தம் சொந்த இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டிருந்த அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடவில்லை. இத்தகைய ஆட்சியை வெறுத்த மக்கள் சுதந்திரமாக வாழ விரும்பி அதற்காகப் போராடவும் செய்தனர். இப்போராட்டத்தின் விளைவாக 1957இல் ஆகஸ்ட் திங்கள் 31ஆம் நாள் மலாயா சுதந்திரம் பெற்றது.

4 comments:

Anonymous said...

அன்றைய மலாயா...இன்றைய மலேசியாவிற்கு தனி சரித்திரம் என்று உண்டா என்ன? பள்ளிப் பாடத்திட்டதில்தான் எத்தனை இருட்டடைப்புகள்...

உண்மைச் சரித்திரத்தையே அழித்த இவர்களுக்கு ஏது சரித்திரம்????

ஆனால் இவர்களுக்கு பாரம்பரியம்...நாகரிகம்...கற்று தந்த நம் தமிழ் சமுதாயமோ இன்று நடு வீதியில்! :(((

')) said...

இனியவள் புனிதா,

வணக்கம்.
உங்கள் ஆதங்கம் நியாயமானது!
உங்கள் கருத்துக்கு நன்றி.

தாங்கள் மலேசியர் என்று தோன்றுகிறது.

')) said...

பதிவுக்கு நன்றி.தயவு செய்து மலேசியா வாழ் தமிழ் மக்கள் வாழ்வு நிலை பற்றி ஒரு விரிவான பதிவு எழுத முடியுமா?

அண்மையில் மலேசியாவில் எம்மவர் அந் நாட்டின் அரசுக்கு எதிராக ஊர்வலங்கள் நடாத்தியமையாலும், பி.பி.சி யில் மனதை உருக்கும் செய்தி ஒன்றை வாசித்ததாலும் மலேசியாவில் வாழும் எம்மவரின் நிலையை அறிய மிகவும் ஆவலாக உள்ளது.

பி.பி.சி கடந்த வருடம் ஒரு செய்திவெளியிட்டிருந்தது. அச் செய்தியில் இரண்டு குழந்தைகளின் தாயான தமிழ் பெண்மணி தனது குழந்தைகளுடன் ஓடும் புகையிரத வண்டியில் வீழ்ந்து மரணத்தைத் தழுவினார் எனும் செய்தி இன்றும் என்னால் ஜீரணிக்க முடியாமல் உள்ளது. அச் செய்தியில் தமிழர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாகவும் மேலும் தெரிவித்திருந்தது.

அதனால்தான் மலேசியாவில் வாழும் எம்மவரின் வாழ்வு நிலையை அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது.

நேரம் கிடைத்தால் இவ் விடயம் குறித்து உங்களிடமிருந்து ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.

மிக்க நன்றி.

')) said...

அன்பு வெற்றி,

உங்கள் மறுமொழிக்கு நன்றி.

மலேசிய மக்கள் பெரும்பாலோர் நடுத்தர வருக்கத்தினருக்கும் கீழே இருப்பவர்கள் ஆவர். அன்றாட வாழ்க்கையை பெரும் போராட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இன்னும் புறம்போக்கு நிலங்களில் வாழ்கின்றனர். அரசாங்கம் தேர்தல் சமயத்தில் மட்டும் அங்கு அடிப்படை வசதி ஏற்படுத்தி கொடுப்பர். உதாரணத்திற்கு மின்சாரம், தண்ணீர் வசதியைக் குறிப்பிடலாம். எனக்கு நினைவு தெரிந்த நாளில் எங்கள் ஊரிலேயே ( சா'ஆ) அப்படி ஒரு பகுதி இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். பல ஆண்டுகளாக அப்பகுதியில் வாழும் மக்களுக்கு மின்சார வசதி இல்லை!

அவர்களில் பெரும்பாலோர் குறைந்த கல்வியறிவைப் பெற்றவர்கள். இந்நாட்டு தேசிய மொழி பேசத் தெரிந்திருந்தாலும் எழுதத் தெரியாது. அவர்களில் சிவப்பு அடையாள அட்டை ( இந்திய வமசாவளியினர் ) வைத்திருந்தனர். அவர்களுக்கு மலேசிய பிரஜா உரிமை இல்லையென்றே கூறலாம். அரசாங்க வேலை வாய்ப்பை இயல்பாகவே கிடைக்காது.

சமூக அவலங்கள், சிக்கல்கள், சண்டை சச்சரவுகள் மலிந்து இருக்கும் வர்க்கத்தினர். குடும்பத் தலைவர் 'குடி'மகனாகவே இருப்பார். இவை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த உண்மை நிலை.

இன்று சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றாலும் பிரச்னை வேறு கோணங்களில் முளைத்துள்ளது.

தாங்கள் குறிப்பிட்ட "இரண்டு குழந்தைகளின் தாயான தமிழ் பெண்மணி தனது குழந்தைகளுடன் ஓடும் இரயில் வண்டியில் வீழ்ந்து மரணத்தைத் தழுவினார்" எனும் செய்தி படித்து மலேசிய இந்திய சமூகமே அதிர்ச்சியடைந்தது. குடும்பப் பிரச்னையே அதற்குக் காரணம்.