Thursday, December 23, 2010

அடைக்கலம்



உள்ளத்தை உருக்குகின்ற உணர்ச்சியுள்ள நூலைப் பற்றி ஒரு பழமொழியுண்டு. "திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்". திருவாசகத்திற்கு ஒரு உள்ளம் உருக வில்லையென்றால் ஒருவாசகத்திற்கும் உருகாது. கல்லைப் பிசைந்து கனியாக்கும் தன்மை திருவாசகத்திற்கு உண்டு.

சரணாகதி என்ற வடசொல்லுக்கு நேர் தமிழ்ச்சொல் இருக்கிறதா என்ற வினாவுக்கு திருவாசகம் விடைதருகின்றது.
ஆண்டவன் அருளைப் பெறுவதற்குத் திருவாசகம் அருமையான நெறியைக் காட்டுகிறது.அதுதான் அடைக்கலம் என்ற நெறி. அது அருமையான தமிழ்ச்சொல். சரணாகதி என்றாலும் அடைக்கலம் என்றாலும் பொருள் ஒன்றே.

அடைக்கலம் என்பது திருவாசகத்தில் அருளிச்செய்யப்பட்ட ஒருபகுதி. அடைக்கலத்தில் மாணிக்கவாசகர் தன்னை அடைக்கலப்பொருளாக ஆண்டவனிடன் ஒப்புவிக்கிறார்.

திருவாசகத்தில் வரும் ஒரு அருமையான வாசகம்:

"வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால்
பொறுப்பவனே அராப் பூண்பவனே பொங்குகங்கை சடைச்

செறுப்பவனே நின் திருவருளால் என்பிறவியை வேர்

அறுப்பவனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே."


விளக்கம்:
நான்வெறுப்பனவே செய்கின்றவன்தான். என் சிறுமையை எல்லாம் ஆண்டவனே! உன்பெருமையினாலே பொறுத்து என் பிறவியின் வேரறுத்துவிட வகைசெய்ய வேண்டும். அடியேன் உன் அடைக்கலம். இத்தகைய பெரிய உதவியை அடியேனுக்குச் செய்யவேண்டும் என்று அவர் சொல்லுகிறார்.

Saturday, March 20, 2010

என் தந்தையின் 3ஆம் ஆண்டு நினைவுநாள்

அமரர் திருமிகு.நா.இலட்சுமணன். பி.ஐ.எஸ் ( ஓய்வு பெற்ற தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் )

இன்று என் தந்தையின் 3ஆம் ஆண்டு நினைவுநாள். அவரது நினைவுமலரிலிருந்து..........

அமரர் திருமிகு.நா.இலடசுமணன் அவர்கள், தமது 17‍வது வயதில் ஆசிரியர் பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு தொடர்ந்து சுமார் 40 ஆண்டு காலம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர்.

அவர் தமிழுக்காக குறிப்பாக தமிழ் இயக்க வளர்ச்சிக்காக இளைஞர் பருவத்திலிருந்தே பொது இயக்கங்களுடன் த‌ம்மை இணைத்துக் கொண்டு சேவையாற்றியுள்ளார். அவர் இளைஞர்ப் பகுதி செயலாளராக இருந்த பொழுது, தமிழகத்துத் தமிழரிஞர்களை மலாயாவுக்கு வரவழைத்து தமிழின மக்களிடையே தமிழுணர்வு ஊட்டியுள்ளார். ம.இ.கா வின் வழி சமூகப்பணியாற்றிய சிறந்த தொண்டர்.

ஆசிரியர்ப் பணி அறப்பணி என்பதை தாம் பணியாற்றிய பள்ளிகளில் எல்லாம் கடமையுணர்வுடன் தமது செயல்நடவடிக்கையின் வழி மெய்ப்படுத்தியுள்ளார். அவர் பணியாற்றிய பள்ளி ஆசிரியர் பெருமக்கள் கூறக் கேட்டிருக்கின்றேன். அவர் மாணவர்களுக்குக் கணிதம் கற்பிக்கும் பாங்கு மகிழ்ச்சிகரமானது. மாணவர்களின் கவனத்தைக் கவருவதில் வல்லவர். குழந்தைகளின் பொது அறிவைத் தூண்ட அடிக்கடி கேள்விகள் கேட்டும், விடுகதை, புதிர்க் கேள்விகள் கேட்டும் சிந்தனை வளர்ச்சியைத் தூண்டியவர். சரியாக விடையளிக்கும் மாணவர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்குவதை தமது இறுதி காலம் வரை செய்து வந்தார். வாசிப்பது அவருக்கு சுவாசிப்பது போன்றது என்றால் மிகையாகாது.

காலஞ்சென்ற என் தந்தையார் அவர்கள் கண்டிப்பும் கடமையுணர்வும் மிக்கவர். ஆனாலும் எல்லோரிடமும் அன்பு பாராட்டுவார். ஜொகூர், சா'ஆ வட்டாரத்தில் தம் ஒத்த வயது மலாய்க்காரர் , சீனர் சமூகத்தினரிடம் நட்புடன் இருந்து 'ருக்கூன் தெதாங்கா' இயக்கத்தின் வழியும் நற்சேவையாற்றியுள்ளார்.

ஆரம்பக் காலத்தில் தமது ஓய்வு நேரத்தில் ஓவியம் வரைவதிலும். கைவினைப் பொருட்கள் செவதிலும் கவனம் செலுத்தியவர், பிற்காலத்தில் தட்டச்சுப் பொருள் மற்றும் தையற் கலையிலும் சுயமாகாக் கற்றுத் தேர்ந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் நல்லாசிரியராகத் திகழ்ந்து நேர்மையுடனும் தர்மத்தின் வழி வாழ்வை செம்மையாக வாழ்ந்து இறைவனடி சேர்ந்துள்ளார். அவரது மறைவு ஈடுசெய்ய இயலாதது!

அப்பாவின் நினைவலைகளில்.....

பிரபஞ்ச அச்சில் மறைதல் என்பது வேறொரு மாற்றமே !

Wednesday, March 17, 2010

இமயமலைக்கு ஓர் இமாலயப் பயணம்: 6

குறிப்பு: இப்படம் விமானம் புறப்பட்டு கொஞ்ச நேரத்தில் ( 11.24க்கு ) எடுக்கப்பட்டது.

நேரம்: இரவு மணி 10.00

விமான எண் 9W 17 என்று அச்சிடப்பட்ட 'போர்டிங் பாஸ்' இன்னும் சட்டைப்பையில் தான் இருந்தது.ஆனால், அப்போது நான் அதை மீண்டும் எடுத்துப் பார்த்தது ஐந்தாவது தடவையாக இருக்கும். ஏரணச் சிந்தனைக்குப் பழகிப் போன இந்த மனம் செய்யும் விளையாட்டை எண்ணி 'மனசுக்குள்' சிரித்தேன். சத்தம் போட்டு சிரித்தால் 'லூசா ?...பைத்தியமா ?' என்று எண்ணிவிடுவார்களோ எனும் போலி கௌரவம் வேறு!

வாழ்க்கையை ஒரு விளையாட்டாக பார்க்கத் தெரியாததால் தானே மனசுக்குள் போறாட்டம் ஏற்படுகிறது.

'வாழ்க்கையை வாழ்ந்து விடு...ஒவ்வொரு கணமும்'.... என்றோ படித்த விசயத்தை நினைவுக்கோப்பிலிருந்து எடுத்து அறிவு கொடுக்கும்.

மனம் ஏற்றுக்கொண்டால் எல்லாம் இன்பமயம்; உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தால் துன்பமயம்.

நடைபெறும் சம்பவங்கள் அனைத்தையும் அனுபவித்து ஏற்றுக்கொள்ளாமல் தடுமாற்றம் அடைபவர்களையே அதிர்ச்சிக்குள்ளான நிகழ்வுகள் ஏற்படும்போது நிலைகுலைந்து விடுகிறார்கள்.

'நான் எந்த விதத்திலும் மாற‌மாட்டேன்; மற்றவர்கள்தாம் எனக்காக மாறவேண்டும்!' என்று இறுகிய மனத்துடன் அடம் பிடிப்போர்க்குத்தான் எல்லாமே சிக்கலாகத்தோன்றும்.

வேறொன்றுமில்லை....விசயம் இதுதான்.
ஒரு மணி நேரத்திற்கு முன் நிகழ்ந்த சம்பவம்.......கேட்டால் சிரிப்பீர்கள்!

சொல்லட்டுமா.....சரி..சரி...

பெரிய பயணப்பையையும் சேர்த்து சிறியப்பையையும் தள்ளுவண்டியில் தள்ளி வந்தேன் என்று கூறியிருந்தேன் அல்லவா..?

ஒரு பயணியின் 'லக்கேஜ்'‍- பயணப்பை 20 கிலோ கிராமுக்குக் கூடுதலாக இருக்கக்கூடாது என்பது 'ஜெட் எர்வேஸ்' விமானத்துக்கான பொதுக் கட்டளை. விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு இலத்திரன் நிறுவையில் பெரிய பயணப்பையை வைத்தேன்.

மேலே சிறிய மின் திரையில் ...22.27 கி.கிராம் என்று காட்டியது.

உடனே அப்பையைத்திறந்து கம்பளிச் சட்டையையும் இன்னும் சில பொருள்களையும் வெளியே எடுத்து தோளில் மாட்டிக்கொள்ளும் சிறிய பைக்குள் நுழைத்தேன்.

மீண்டும் நிறுவையில் வைத்துப் பார்த்தால் அளவை 19.25 கி.கிராம் என்றிருந்தது.

அதிகாரி ஒருவர் பெரிய பையை 'ஸ்கேன்' செய்து அதன் மேல் செவ்வக வடிவிலான 'பார்கோர்ட்' அச்சிடப்பட்ட வழவழப்புக் காகிதத்தை ஒட்டினார்.பிறகு ஏதோ ஒரு
விசையை அழுத்தினார். என் எதிரிலேயே பெரிய பை தானியங்கி இயந்திரத்தால் நகர்த்தப்பட்டு அதிகாரிக்குப் பின்னால் மறைந்திருந்த மற்றொரு தானியங்கி நகர்த்திக்குத் தள்ளப்பட்டு 'காணாமல்' போனது.

அட...மனுசன் ( அதிகாரி ) ஒன்றுமே நடக்காததுபோல் இயல்பாக புன்முறுவல் பூத்த வண்ணம் என்னிடம் ஆங்கிலத்தில் 'நன்றி' சொன்னார்.

இந்த பாழாய்ப்போன மனசுதான் 'பக்' 'பக்'கென கண நேரம் அடித்தது.
பத்திரமாய் நாம் ஏறவிருக்கும் விமானத்திற்குள் அனுப்பினால் சரி...என அந்த அதிகாரியைப் பார்த்து ஒப்புக்கு அவர் பானியில் 'நன்றி' சொன்னேன்.

முத‌ற்சோத‌னை பெரிய‌ பைக்கு என்றால், இர‌ண்டாவ‌து சோத‌னை சிறிய‌ பைக்கும் என‌க்கும். அங்கே சோதனை அதிகாரியாக நின்ற‌வர்களில் சிலர் த‌மிழ‌ர்க‌ள். அலைபேசி மற்றும் இத‌ர‌ த‌க‌வ‌ல் சாத‌ன‌ங்க‌ள் இருந்தால் எல்லாவ‌ற்றையும் அங்கே ஒரு பெட்டியினுள் வைத்துவிடும்ப‌டி கேட்டுக்கொண்டார். என் கையில் இருந்த‌ த‌மிழ் புத்த‌க‌த்தைப் பார்த்த‌தும் த‌மிழில் 'எங்க‌ சார் போறீங்க‌ ? ம‌லேசிய‌ரா நீங்க‌ள் ?' என்று கேட்டார்.

'ம‌லேசிய‌ர்தான்....புது டெல்லிக்குச் செல்கிறேன்'

'நானும் ம‌லேசிய‌ர்தான்' என்று அவ‌ர் கூறும்போது பொருள்க‌ள் யாவும் 'ஸ்கேன்' செய்ய‌ப்ப‌ட்டு அடுத்த‌ இட‌த்திற்கு ந‌க‌ர்த்த‌ப்ப‌ட்ட‌து. தோள்பையைத் திற‌ந்து பார்த்தார். முத‌லில் நுழைத்த‌ க‌ம்ப‌ளி ஆடையும் இன்னும் சில‌ புத்த‌க‌ங்க‌ளும் இருத்த‌ன‌. ச‌ரி பார்த்துவிட்டு என்னிட‌ம் கொடுக்க‌ அதை அப்ப‌டியே என் இட‌து தோளில் மாட்டிய‌ வ‌ண்ண‌ம் முன்னே ந‌கர்ந்தேன். அது ஆளை முழுமையாக‌ 'ஸ்கேன்' செய்யும் இட‌ம் என்று உண‌ர்ந்த‌போது 'அலார‌ம்' ஒலித்தது.

தோளில் மாட்டியிருந்த‌ பையை ப‌க்க‌த்தில் உள்ள‌ மேசையில் வைத்தேன்.
அதை மீண்டும் சோத‌னையிட்டார். ஒன்றும் கிடைக்க‌வில்லை போலும்!

சோத‌னை அதிகாரி மீண்டும் காற்ச‌ட்டைக்குள் ஏதேனும் இருக்கிற‌தா என‌ வின‌வினார். உள்ளுக்குள் ச‌ற்றே ப‌த‌ற்ற‌த்தில் இருந்த‌தை வெளிக்காட்டிக் கொள்ளாம‌ல் ப‌ண‌ப்பை ம‌ட்டும்தான் உள்ளது என்ப‌தை எடுத்துக் காண்பித்தேன்.
மீண்டும் என்னை 'ஸ்கேன்' ப‌குதியைத் தாண்டி வ‌ர‌ச்சொன்னார்.
இம்முறை எந்த‌ ச‌த்த‌மும் இல்லை!

'தப்பித்தோம்...அப்படா....! 'என்றிருந்த‌து.

சரி...பிற‌கு எப்ப‌டி 'அலார‌ ஒலி' எழுப்பிய‌து...?
புரியாத‌ புதிராக‌ இருக்கிற‌தே.....?

ப‌ய‌ண‌ம் தொட‌ர்ந்த‌து.......விடைதெரியாம‌ல்!

Tuesday, March 16, 2010

இமயமலைக்கு ஓர் இமாலயப் பயணம்:5



"நான் உரைக்கும் வார்த்தைகள் எல்லாம் இறைவன் என்னிடம் கூறிய வார்த்தைகள். நான் சுயமாக பேசவில்லை" என்று சொன்னவர் வள்ளலார் என்றழைக்கப்பெறும் சிதம்பரம் இராமலிங்கம் எனும் மகான்.

பயணமோ ஆன்மிக யாத்திரை !....எனவே மனசை முன்கூட்டியே பக்குவப்படிதியதாலோ என்னவோ மகான்களின் நூல் தொடர்பு கிடைத்துவருகிறது.

இக்கருத்தை விளக்கும் பாடலைத்தான் .....

நான் உரைக்கும் வார்த்தை எல்லாம்
நாயகன் சொல் வார்த்தை அன்றி
நான் உரைக்கும் வார்த்தை அன்று!


....அப்புத்தகத்தில் கண்டேன்;நெகிழ்ந்தேன்.

கொஞ்சம் நேரம் கண்மூடி மீண்டும் விழித்தபோது அந்த அகண்ட விமான நிலைய பயணிகள் அமரும் இருக்கியில் தன்னந்தனியாக இருப்பதை உணர்ந்தேன்.

ஜோகூர் பாருவிலிருந்து வாடகை வண்டிமூலம் 'சாங்கி' விமான நிலையம் வந்தடைதேன்.கொண்டுவந்த இரு பைகளில் ஒன்று பெரியது மற்றொன்று சிறியது -தோளில் மட்டிக்கொள்வது.பெரிய துணிப்பையின் அடியில் சக்கரங்கள் இருப்பதால் கனமாயிருந்தாலும் சுலபமாக தள்ளிச் செல்லலாம். இருப்பினும் பெரியதையும் சிறியதையும் செர்த்து வைத்துச் செல்ல நுழைவாயிலில் வரிசைக்கட்டிக் கொண்டு இருந்த தள்ளுவண்டி ஞாபகத்திற்கு வந்தது. உடனே எழுந்து நடந்தேன். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டு ஒட்டிக்கொன்டு இருந்த தள்ளுவண்டிகளில் ஒன்றை பின்னாடி இழுத்து வாட்டமாக முன்னுக்குத் தள்ளி வந்தேன்.

முதல்முறை தன்னந்தனியாக வெளிநாட்டிலிருந்து ( சிங்கை ) இன்னொரு நாட்டிற்குச் செல்கிறோமே.....கொஞ்சமாவது முன் ஜாக்கிரதை வேண்டாம்..?
இப்படியா....இரு பயணப்பைகளையும் அப்படியே விட்டு விட்டுச் செல்வது ?

ஏரணமாய் எச்சரிக்கை எண்ணங்களை ஏவிவிட்டது பாழாய்ப்போன 'மனம்'.

அட....இங்கு என்னைச் சுற்றி இருபது மீட்டர் சுற்றளவில் மனித நடமாட்டம் இல்லை! பிறகு ஏன் அலட்டிக்கொள்கிறாய்..? அதே மனம் சமாதானம் சொல்லிக்கொண்டது. சரி...சரி...பயணச்சீட்டும் கடவுப்பத்திரமும் சட்டப்பையில் இருந்ததால் வந்த‌ ஒரு மெத்தனப்போக்கு. கவனிக்கிறேன்..!

காற்சட்டைச் சோப்பினுள் இருந்த‌ இலத்திரன் படக்கருவியை உருவி வெளியே எடுத்துதேன். விசையை அழுத்தியதும்...சன்னமாய் எழும்பும் ஒலி கேட்டது. காட்சியை இலத்திரனில் பதிவாக்க தயார் என்பதைத் திரையில் நெரலையில் காண்பித்தது. இடது கையில் அக்கருவியை சற்றே 45 பாகைக்கு கையை நீட்டி ஒரு 'கிளிக்'.

'எனக்குள் ஒருவன் என்னைப் பிடித்தான்'!

அதை பத்திரமாய் வைத்துவிட்டு மீண்டும் அருட்பெருஞ்சோதி ஞானச்சித்தர் புத்தகத்தைத் திருப்பினேன். உனக்குத் தெரியுமா ? உனக்குத் தெரியுமா ?என்பதுபோல் அடுக்கடுக்காய் கேள்விகள்..? அதில் ... சிதம்பரம் இராமலிங்க பெருமானாரை நிழற்படம் எடுக்க பலர் பலமுறை முயன்றும் முடியாது போனது உனக்குத் தெரியுமா ? இறுதியாக ஓர் ஓவியர் கருங்குழியில் அய்யா அவர்களை நேரில் பலநாட்கள் பார்த்து வரைந்த மீசையுடன் கூடிய ஓவியமே அவருடைய உண்மையான‌ தோற்றம் என்பது தெரியுமா ?

மனதில் ஒரு 'கிளிக்'; பளிச்சென்று மின்னல் போன்ற ஒரு 'ஃப்லெஷ்'.


Sunday, March 14, 2010

இமயமலைக்கு ஓர் இமாலயப் பயணம் 4 : திருக்குறள் கூறும் அறங்கள்



திருக்குறள் கூறும் அறங்கள்:

* அன்பாய் இருப்பது அறம்
* உண்மை இன்ப‌ம் த‌ருவ‌து அற‌ம்
* இனிமையாய்ப் பேசுவ‌து அற‌ம்
* க‌டுஞ்சொற்க‌ளைத் த‌விர்ப்ப‌து அற‌ம்
* ந‌ல்ல‌தையே நாடுவ‌து அற‌ம்
* ந‌ன்மை தராத‌வ‌ற்றைத் த‌விர்ப்ப‌து அற‌ம்
* ம‌ன‌தில் குற்ற‌ம‌ற்று இருப்ப‌து அற‌ம்


இமயமலைக்கு ஓர் இமாலயப் பயணம்:4

'கவனகர் அய்யா' தலைமையில் இமயமலை யாத்திரை.

சத்தியமான ஒன்றை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். திருக்குறளை ஞான மறைநூலாக 'விழிப்புணர்வோடு' பார்க்கத்தூண்டியவர் 'கவனகர் அய்யா' என்று மக்களால் கனிவுடன் அழைக்கப்பெறும் திரு.இராம. கனகசுப்புரத்தினம் அவர்கள்.

திருக்குற‌ள், த‌மிழ் ச‌மூக‌த்திற்குக் கிடைத்த‌ மாபெரும் புதைய‌ல். இய‌ற்ற‌ப்பெற்ற‌ ஒவ்வொரு குற‌ட்பாவும் ஒவ்வொரு வாழ்விய‌ல் சூத்திர‌ம். வாழ்க்கைப் பிர‌ச்னைக‌ள் அத்த‌னைக்கும் தீர்வு காண‌ ஒரு நூல் உண்டென்றால், அது திருக்குற‌ள் ம‌ட்டுமேயாகும்.

* வாழ்வாங்கு வாழ‌ விரும்புவோர்க்கு அது ஒரு வாழ்க்கை நூல்
* மெய்யுண‌ர்வு பெற‌ விரும்புவோர்க்கு அது ஒரு ஞான‌ நூல்
* யோக‌ம் ப‌யில‌ விரும்புவோர்க்கு அது ஒரு யோக‌ நூல்
* அர‌சிய‌ல்வாதிக‌ட்கோ அது ஒரு அர‌ச‌ த‌ந்திர‌ நூல்
* காதல் ம‌ல‌ர்ந்த‌ இள‌ம் உள்ள‌ங்க‌ளுக்கோ அது ஒரு காத‌ல் நூல்
* அதுபோல் வ‌ணிக‌மோ தொழிலோ ந‌ட‌த்தி வ‌ள‌ம்பெற‌ விரும்புவோர்க்கு அத‌ற்குரிய இர‌க‌சிய‌ங்க‌ளைக் கூறும் தொழில்நுட்ப‌ நூல்

இப்ப‌டி ப‌ல்வேறு கோண‌த்திலிருந்து த‌மிழ்ச்ச‌மூகம் விழிப்புண‌ர்வுடன் திருக்குற‌ளைப் ப‌யின்று அத‌ன்வ‌ழி வாழ்வாங்கு வாழ வகைசொல்லும் ஒரு சான்றோர்,'பதினாறு கவனகர்' திருக்குறள் இராம‌. க‌ன‌க‌சுப்புர‌த்தின‌ம் அவ‌ர்க‌ள்.

திருக்குற‌ளுக்கு 'க‌வ‌ன‌க‌ர் அய்யா' உண‌ர்வுரை எழுதியுள்ளார்.
இவர் 1330 குற‌ட்பாக்க‌ளையும் ம‌ன‌தில் ப‌திய‌வைத்துள்ள‌ ஒர் அற்புத‌ வித்த‌க‌ர். குற‌ளின் எண்ணைக்குறிப்பிட்டால் போதும் குறளை ஒப்புவிப்பார். மற்றுமொரு ஆச்சரியம் அதற்குரிய ஆங்கில மொழிப்பெயர்ப்பயையும் ( கவியோகி சுத்தானந்த பாரதியாரால் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டது ) இந்த அதிசய மனிதர் அணியப்படுத்தியுள்ளார்.....உதார‌ணத்திற்கு குற‌ள் எண் 34 என்றால்....

" ....ம்ம்ம் எண் முப்ப‌த்து நான்குங்க‌ளா..யா...ச‌ரி சொல்கிறேன் ச‌ரி பார்த்துகொள்ளுங்க‌ள்....

ம‌ன‌த்துக்க‌ண் மாசுஇல‌ன் ஆத‌ல் அனைத்துஅற‌ன்
ஆகுல் நீர‌ பிற.


'In Spotless mind Virtue is Found

Not in Show and Swelling sound'

என்று சிறிது நேரத்தில் கூறிவிடுவார். அதிசயமாயிருக்கும்...ஆனால் அவரோ இதுபோல் உங்களாலும் செய்ய முடியும் என்று உற்சாகமூட்டுவார்.

அக்குற‌ளின் விள‌க்கத்தை அவ‌ர‌து உண‌ர்வுரையிலிருந்து.....
( குற்ற‌ம‌ற்ற‌ ம‌ன‌நிலையே அற‌மாகும். ம‌ற்ற‌வை அனைத்தும் வெறும் ஆர‌வார‌ங்க‌ளே ).

'இந்த‌ உல‌க‌த்தைப் பொறுத்த‌வ‌ரை அற‌த்தின் ஆற்ற‌லை முழுமையாக‌ப் பெற‌வேண்டும் என்றால் ம‌ன‌த்தூய்மையை அடைந்தே ஆக‌வேண்டும்!'என்பார் திருவ‌ள்ளுவ‌ர்.

'ச‌ரி, அந்த‌ ம‌ன‌க்குற்ற‌ங்க‌ள் என்ன‌ ? என்ற‌ கேள்விக்கு அடுத்த‌ குற‌ளில் விடைய‌ளிப்பார்.

'அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இய‌ன்ற‌து அற‌ம்' ‍ ( குற‌ள் 35 )


"பொறாமை, தேவையை மீறிய‌ ஆசை, கோபம், க‌டுஞ்சொல் போன்ற‌வை ம‌ன‌க்குற்ற‌ங்க‌ள்" என்ப‌து இத‌ன் பொருள்.

இவ்வாறு 1330 திருவ‌ள்ளுவ‌ரின் குறள்க‌ளுக்கு உணர்வுரை எழுதிய‌வ‌ருட‌ன் இம‌ய‌ம‌லை யாத்திரையா ?....என்று எண்ணும் போதே ம‌ன‌துக்குள் ம‌கிழ்ச்சி பொங்கியது.

திருக்குறள் மட்டுமா....?

திரு.இராம‌.க‌ன‌க‌சுப்புர‌த்தின‌ம் அவ‌ர்க‌ள் கால‌ம் ந‌ம‌க்கு வ‌ழ‌ங்கியுள்ள‌ க‌ருத்துக் க‌ருவூல‌ம். ஞான‌க் க‌ள‌ஞ்சிய‌ம். அவ‌ர‌து உள்ள‌ம் திரும‌றைக‌ளும் அவ‌ற்றை அருளிய‌ ம‌கான்க‌ளும் ஆட்சி செய்யும் ஆன்மிக‌ அர‌சாங்க‌ம்.

"உண்மைக்கு உயிர் கொடுப்போம்" எனும் க‌ருப்பொருளுடன் ஒவ்வொரு மாத‌மும் வெளியீடு காணும் அவ‌ர‌து 'க‌வ‌ன‌க‌ர் முழ‌க்க‌ம்' என்னைப்போன்ற‌ ஞான‌சூன்ய‌ங்க‌ளுக்கு ஒரு வ‌ர‌ப்பிர‌சாத‌ம்.

'க‌வ‌ன‌க‌ர் அய்யா'வுட‌ன் தொட‌ர்புகொண்டு இம‌ய‌ம‌லை யாத்திரையில் க‌ல‌ந்துகொள்ள‌ அணிய‌மாயிருக்கிறேன் என்று 2 மாதங்களுக்கு முன்பு உறுதிய‌ளித்த‌திலிருந்து ப‌ய‌ண‌த்திற்கு இன்னும் சில‌ ம‌ணிநேர‌ங்க‌ளே....என்று நினைக்கும்போது சொல்லொன்னா இன‌ம்புரியா இன்ப‌ம்.

*புது டெல்லி பயணத்திற்கு 'சிங்கை சாங்கி விமான நிலையத்தில்' எப்ப‌டி காத்திருக்கிறேன் பாருங்க‌ள்!

சும்மாவா உட்கார்ந்திருந்தேன்...?

கையில் முதல் நாள் இரவு தண்டாயுதபானி கோவிலில் வாங்கிய‌'அருட்பெருஞ்சோதி ஞான‌ச் சித்த‌ர்' எனும் புத்த‌ம் புதிய‌ புத்தக‌ம்.

"நான் உரைக்கும் வார்த்த‌ எல்லாம் நாய‌க‌ன் சொல் வார்த்தை அன்றி நான் உரைக்கும் வார்த்தை அன்று"

இம‌ய‌ம‌லை யாத்திரை.....தொட‌ரும்.

Wednesday, March 10, 2010

இமயமலைக்கு ஓர் இமாலயப் பயணம் - 3



முன்குறிப்பு:
நால்வர் விழா கடந்த நவம்பர் மாதம் 27 & 28 இல் இனிதே நடைபெற்றது.

நாள்: 28.11.2009

மதியம் 3 மணியளவில் நால்வர் விழா நிறைவுற்றதும் அங்கிருந்து வீட்டிற்கு விரைந்தேன். விமானம் புது டெல்லி புறப்பட இன்னும் சுமார் 8 மணி நேரம் இருப்பினும் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். அன்று சனிக்கிழமையாதலால்
ஜொகூர் பாருவிலிருந்து சிங்கையை இணைக்கும் பாலம் மற்றும் சுங்கச்சாவடி எல்லாம் வாகனங்கள் அதிகமாகக் காணப்படும்.

மனம் பலவாறாக அலைபாய்ந்தது. 10 நாட்களுக்கு தேவையான உடைகள்.பயண ஏற்பாட்டுப் பை , பயண கடவுப்பத்திரம்,பயணச் சீட்டு ...இப்படிச் சிந்தையில் அடுக்கடுக்காக சரிபார்த்தது.

வீட்டிலிருந்து 6.30 மணிக்கு வெளியேறினால் பாதகமில்லை. வழியில் வாகன நெரிசல் ஏற்பட்டு தாமதமானாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சிங்கை விமான நிலையைத்தை அடைந்து விடலாம்.

மனம் கொஞ்சம் நிதானத்திற்கு வந்தது.

இமயமலையைப் பற்றிய சிந்தனை.....தொடர்ந்தது.

இமயமலைக்கு ஓர் இமாலயப் பயணம் -‍ 2



இமாலயப் பயணம் தொடங்கியது.....

குருவருள் இல்லையெனில் திருவருள் இல்லை என்பது எவ்வளவு உண்மை! அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தெரியும்.

அப்படியொரு அருமையான தருணம் எமக்கும் வாய்த்தது.

குருவுக்கு விழா : 2ஆம் ஆண்டாக ஜொகூர் பாரு,அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒத்துழைப்போடு சைவத்தைத் தமிழோடு மீட்டுக் கொடுத்த சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் நால்வருக்கும் விழா!


இனிய‌ ந‌ண்ப‌ர் திரு.பூப‌தி அவ‌ர்க‌ளின் அழைபினை ஏற்றேன்; விழா ஏற்பாட்டுக் குழுவில் துணைச் செய‌ல‌ர் பொறுப்பினையும் ஏற்றேன்.

நால்வ‌ர் விழா ஏற்பாட்டுக்குவில் தொண்டாற்றுவ‌து எம‌க்கு புதிய‌ அனுபாவம்.


இருப்பினும் விழா மிக‌ச் சிற‌ப்பாக‌ ந‌டைபெற்ற‌து. கோலால‌ம்பூரிலிருந்து சிற‌ப்புச் சொற்பொழிவாள‌ர்க‌ள் இருவ‌ர்: அ) திரு.பாலகிருஷ்ண‌ன் அவ‌ர்க‌ளும் திரு.த‌ரும‌லிங்க‌ம் அவ‌ர்க‌லும் முறையே திருஞான‌ச‌ம்ப‌ந்த‌ர் ப‌ற்றியும் திருநாவுக்க‌ர‌ச‌ர் ப‌ற்றியும் சொற்பொழிவு ஆற்றின‌ர். அவ‌ர்க‌ளை அடுத்து சிங்கை முனைவ‌ர் திரு சிவ‌குமார‌ன் அவ‌ர்க‌ள் சுந்த‌ர‌மூர்த்தி சுவாமிக‌ள் தொட‌ர்பான‌ ப‌ழ‌ஞ்செய்திக‌ளை வேறொரு கோண‌த்தில் அணுகி எடுத்துரைத்தார்.

விழா 2ஆம் நாள் இர‌வு ப‌ய‌ண‌ம். ம‌திய‌ம் ம‌ணி 3வ‌ரை நால்வ‌ர் விழாவில் இருந்தேன்.

Monday, March 8, 2010

இமயமலைக்கு ஓர் இமாலயப் பயணம்: படம் சொல்லும் கதை 1


இமயமலைக்கு ஓர் இமாலயப் பயணம்: படம் சொல்லும் கதை 1

அனைவருக்கும் வணக்கம்.

இமயமலைக்கும் இந்த படத்திற்கும் என்னையா தொடர்பு என்று சிலர் யோசிப்பதும் .....

இமயம‌லைக்கா....?
எப்போது சென்றீர்....?
உம‌க்கு வேலை வெட்டி இல்லையா.....?
என‌ யோசிப்ப‌தும்... புரிகிற‌து.

அதையெல்லாம் பிற‌கு கூறுகிறேன்.

முத‌லில் உங்க‌ளுக்கு ஒரு புதிர்க் கேள்வி.
மேலே காணப்படும் இலத்திரன் படம் எங்கு எடுக்கப்பட்டது அல்லது எந்த நாட்டு விமான நிலையத்தில் இருக்கிறது ?

ச‌ரியாக‌ச் சொல்ப‌வ‌ர்க‌ளுக்கு ஆயிர‌ம் வெள்ளியெல்லலாம் த‌ருகிறேன் என்று ஏமாற்ற‌ விரும்ப‌வில்லை. 'சும்மா இருந்து சுக‌ம் காணும்' நிலைக்கு முய‌ற்சி செய்து கொண்டிருப்ப‌தால் 'சும்மா' ஒரு கேள்வி.

விடை தெரியுமா...? ம‌றுமொழி தாருங்க‌ள்.

( ப‌ய‌ண‌க்க‌ட்டுரை எழுதலாம் என்றுதான் ஆசை.ஆனால் ப‌ட‌க்க‌ட்டுரையாக‌ அல்ல‌வா மாறிவிட்ட‌து....என்ன‌ செய்ய‌ ?)

Friday, January 1, 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2010


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2010.
உங்கள் வாழ்வு வளம்பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.