Thursday, January 10, 2008

நோட்டுப் புத்தகக் குறிப்பு என்ன செய்தது?

'குறிப்பெழுதும் மனிதன் குறிக்கோளுடன் வாழ்வான்' என்றார் பிளாட்டோ. எண்ணத்தில் உதித்தவற்றை உடனே சிறுகுறிப்புடன் எழுதி வைத்துக்கொள்வது சிறப்பு. தக்க தருணத்தில் கைகொடுக்கும்.

ஒருவருடைய உள்ளத்தில் எப்போது கருத்துக்கள் புத்தாக்கச்சிந்னைகள் எப்பொழுது வேண்டுமானாலும் தோன்றலாம். அவற்றை எப்பொழுதுமே மனதில் பதிய வைக்கவும் முடியாது. ஒதுக்கி வைக்கவும் முடியாது. பதுக்கி வைக்கவும் முடியாது. ஏனெனில், மனித மனம் விசித்திரமானது. சாமானியர்கள் விளங்கிகொள்ள முடியாத விந்தையானது. மனிதன் அன்றாடம் ஆயிரக்கணக்கான எண்ணச் சூழலில் வாழ்பவன். அவன் நினைப்பவற்றையெல்லாம் மூளையானது தன்னுடைய அணுக்களில் பதிய வைத்துக் கொண்டாலும் திரும்ப நினைவுக்குக் கொணர முடியாமல் போய்விடவும் வாய்ப்புண்டு. ஆனால், கருத்துக்களையும் எண்ணங்களையும் , தான் கையாளும் குறிப்புப் புத்தகத்தில் ஒதுக்க முடியும், பதிக்க முடியும், பதுக்கவும் இயலும் !

இப்படித்தான், பத்துமொழிகளில் சிறப்புற அறிந்த பன்மொழி வித்தகர் ஒருவர் வாழ்ந்திருக்கிறார். இந்திய விடுதலை இயக்கத் தீவிரதீரர் விநாயக தாமோதர சாவர்க்கரின் அறிமுகத்தால் இங்கிலாந்தில் வசித்த போதே, தேசிய இயக்கத்தில் ஈடுபட்டவர். கிரேக்கம் முதலான மொழி வல்லமை காரணமாகப் பல நூல்களைத் தமிழில் தந்தவர். திரு.வி.க. போன்றோர் ஈர்ப்பால் பத்திரிகை ஆசிரியர் ஆனவர். திருக்குறள் அவரை முழுவதுமாக ஆட்கொள்ள அதனை ஆங்கிலத்தில் " The Kural or The Maxim of Thiruvalluvar"(1916) எனும்
தலைப்பில் மொழிப்பெயர்த்தார். எமர்சனின் 'Self Reliance' எனும் கட்டுரையைத் தமிழில் 'தன்னம்பிகை' எனும் தலைப்பில் தந்தார்.

யாரந்த தேசபக்தர் ?

கம்பராமாயணத்திற்கு முதன் முதலில் ஆங்கிலத்தில் திறனாய்வு செய்த பெருமையாளர். மேலும், இவர்தான் தமிழில் முதல் சிறுகதையைப் பெற்றெடுத்த தந்தையுமாவார். ஆம். மொழியார்வம், முதிர்ந்த நாட்டுப்பற்று, முனிவர்க்குரிய மனப்பக்கும், வீரனுக்குரிய வேகம், நேர்மையாளருக்குரிய நெஞ்சுரம், பழமையில் பக்தி,புதுமையில் ஆர்வம், தொண்டுணர்வு என முழுவடிவமாக விளங்கியவர் - வ.வே.சுப்பிரமணிய ஐயர்.

வ.வே.சு ஐயர் தம்முடைய 'நோட்டுப் புத்தகத்தில்' தாம் நினைத்த நினைப்புகளை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு உள்ளார். இதில்
என்ன விஷேசம் என்றால், பிறர் பார்த்தாலும் அறியும் வண்ணம் சில குறிப்புகளை எழுதியிருக்கிறார். சில குறிப்புகள் மற்றவர்க்குப் புரியக்கூடாது என்று பதுக்கியும் வைத்து இருக்கிறார். அவர் பிரிட்டிஷாரால் எப்பொழுதும் வேவு பார்க்கப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சங்கேதக் குறியீடுகளால் சிலவற்றைக் குறித்துள்ளார்.

வ.வே.சு ஐயர், மகாகவி பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'இந்தியா' என்னும் வார இதழ் மடலில் பல உணர்ச்சி கொப்பளிக்கும் செய்தி விவரங்களைத் திரட்டிப் படிப்போருக்கு விழிப்புணர்வையும் நல்கியுள்ளார். உதாரணத்திற்கு இதைப் படிக்கவும்...
"....இதற்கெல்லாம் என்ன காரனம்? ஒரெ ஒரு காரணந்தான். அதாவது உலகத்தில் பரவி வரும் சுதந்திரமும் ஜன ஐக்கியமுமே. இதுவரை
ராஜாகங்கள் ஒன்றோடொன்று சிநெகம் செய்து கொண்டு தங்களுடைய பிரஜைகளை இம்சித்து வந்தார்கள். இன்னும் இம்சித்து
வருகிறார்கள். ஆனால் சென்ற நூறு வருஷங்களுக்குள் ஜனங்கள் விழித்துக் கொண்டார்கள். ராஜாங்கங்கள் செய்கிற அக்கிரமங்களைப்
பார்த்துக்கொண்டு ஜனங்கள் அதை எதிர்க்கத் தீர்மானித்து விட்டார்கள். .....கடைசியில் ஜனங்களுடைய கட்சி வெல்லும் என்பதில்
தடையில்லை..."
( ஆதாரம்: வ.வே.சு ஐயர்- இந்திய இலக்கியச் சிற்பிகள், கோ.செல்வம்(2000).சாகிக்திய அக்காதெமி )

1 comments:

')) said...

குறிப்பெடுக்கும் ப்ழ்க்கம் அவசியம் தான். இத்தனை நாட்களாக குறிப்பெடுக்காமள் இருந்து விட்டேன். இனி தொடங்கலாமே!