Saturday, March 19, 2011

தெய்வம் நமக்காக வருமா?



காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

விளக்கம் : மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும்.



கேள்வி:
அருமையானத் திருக்குறள் ஐயா. கண்கள் இருந்தும் நாம் குருடர்களாக வாழ்கிறோமா என்ற அச்சம் தீடீரெனத் தோன்றிவிட்டது...எங்கே செல்கிறோம் நாம்? இதனைப் பற்றி திருவள்ளுவர் ஏதாவது கூறியிருக்கிறாரா?

நல்ல கேள்வி....பதில் சொல்ல முயல்கிறேன்.

அதாவது சமுதாய வாழ்க்கை என்பது ஒரு கூட்டு முயற்சி. 'எனக்கென்ன?' என்று ஒருநேரம் இருந்தாலும் மறுகணம் இருக்கத்தோன்றாது. நல்ல மனிதத்தன்மையின் இயல்பான பண்பு அது.

ஒருவர் மற்றவருக்கு உதவியாய் இருப்பதில் இந்தப்... பிரபஞ்சத்தின் அடிப்படை சூட்சுமம் அடங்கியுள்ளது. சிறிதளவாவது...எந்த வகையிலாவது...இயன்றளவு என்று உதவிசெய்பவர்களை இயற்கை கூர்ந்து கவனிக்கிறது என்கிற உண்மை பலர் அறிவதில்லை. இவையெல்லாம் 'மறைந்து கிடக்கும்' இரகசியங்கள்.

இந்த உதவும் மனப்பான்மையிலிருந்துதான் நாம் 'சமூக அக்கறை' எனும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படுவோம்.

சமூக அக்கறையுடன் பொதுத்தொண்டு செய்ய வருவோருடன் மட்டுமே இயற்கை தொடர்பு கொள்ளும். இறையருளும் இறங்கிவரும். 'தான் உண்டு தன் வேலை உண்டு' என்று வாழும் சுயநலமிகளை இயற்கை திரும்பியும் பார்க்காது. இறையருளும் அவர்களுக்கு வாய்க்காது.

ஒருவகையில், சமூக அக்கறையுடன் செய்யும் தொண்டு என்பது பிறருக்கு செய்யும் உதவி கிடையாது. அது நமக்கு நாமே மறைமுகமாகச் செய்யும் உதவியே ஆகும். ( இதுவும் 'சுயநலம்' தானே என்று எண்ணிவிடாதீர்கள். இது 'அதையும் தாண்டியது. வேண்டுமானால்..."யார் யார் சிவம்? நீ நான் சிவம்..!" எனும் பாடலை மனதிற்குள் ஓடவிட்டுப் புரிந்து கொள்ளுங்கள்! )

இதோ நீங்கள் கேட்ட குறள்:
'குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான் முந்தூறும்' (குறள் ; 1023)
விளக்கம்: 'சமூக அக்கறையுடன் பொதுத்தொண்டு செய்வோர்க்குத் தெய்வமே வரிந்து கட்டிக்கொண்டு உதவி செய்யும்' என்பதே இதன் பொருள்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு அய்யன் திருவள்ளுவரை ( தமிழ்ஞானச் சித்தர் )
துணைக்கழைத்தேன். எல்லாப் புகழும் அய்யனைச் சாரும்.

2 comments:

')) said...

நன்று.பண்பை மறந்தவர்கள் பலர்.பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

மிகவும் உண்மையானக் கருத்து.
திருமலர்,தாமான் யுனிவர்சிட்டி இடைநிலைப்பள்ளி