Tuesday, February 26, 2008

மலாயா சரித்திரம்


மலேசியா என்று வழங்கப்படுவதற்கு முன்பு மலாயா என்றுதான் அழைத்தனர். கொஞ்சம், சரித்திரம் காண்போமா ? மலாயாவை ஆட்சி செய்தவர்களுக்கு பல காரணங்கள் இருப்பினும், முதன்மைக் காரணமாக இருப்பது அதன் இயற்கை வளம் என்றால் மிகையாகாது. மேலும் அதனால் கிடைக்கப்பெறும் வாணிப லாபம் என்றும் கூறலாம்.

ஏற்கனவே கூறியது போல், மலேசியா ( மலாயா ) இயற்கை வளம் மிகுந்தது. வரலாற்றுப் புகழ் பெற்றது. இங்கு வாசனைப் பொருட்கள் மிகுதியாகக்
கிடைத்தன. கிராம்பு, மிளகு, ஏலம்,பட்டை முதலியன வாசனைப் பொருட்களாகும். தங்கம், ஈயம் போன்ற உலோகப் பொருட்களும் கிடைத்தன.
இப்பொருட்களை வாங்குவதற்காக வந்த மேல் நாட்டவர் பலர் மலாயாவிற்கு வந்தனர். இங்குள்ள இயற்கை வளம் அவர்களைக் கவர்ந்ததால் அதைக்
தங்களின் உரிமையாக்கிக் கொள்ளவே மலாயாவை அவர்கள் கைப்பற்றினர்.
மலாயாவிற்கு முதலில் வந்த ஐரோப்பியர்கள் போர்த்துகீசியர்கள் ஆவர். அவர்கள் 1511இல் மலாக்காவைக் கைப்பற்றினர். 130 ஆண்டுகள் வரையிலான அவர்களுடைய ஆட்சிகளுக்குப் பிறகு மலாக்கா டச்சுக்காரர்களின் வசமாயிற்று.19ஆம் நூற்றாண்டு முதல்ஆங்கிலேயர்கள் மலாயாவைச் சிறுகச் சிறுகத் தங்கள் வசமாக்கினர்.

அந்நிய ஆட்சியாளர்கள் மக்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. தம் சொந்த இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டிருந்த அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடவில்லை. இத்தகைய ஆட்சியை வெறுத்த மக்கள் சுதந்திரமாக வாழ விரும்பி அதற்காகப் போராடவும் செய்தனர். இப்போராட்டத்தின் விளைவாக 1957இல் ஆகஸ்ட் திங்கள் 31ஆம் நாள் மலாயா சுதந்திரம் பெற்றது.

Monday, February 25, 2008

மலேசிய ஆட்சி முறையில் மரபு வழிமுறை அம்சங்கள்


இன்றைய மலேசிய ஆட்சி முறைக்குப் பண்டைய மலாக்காவின் மரபுவழி ஆட்சி முறை அம்சங்களே அடிப்படையாக உள்ளன.

15-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் முதலாவது மலாய் ஆட்சி மலாக்காவில் தோன்றியது. பரமேஸ்வரா மலாக்காவை நிறுவி அதன் முதல் சுல்தான் ஆனார். அவர் ஓர் இந்து சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய சரித்திர புத்தகங்களில் பரமேஸ்வரா இஸ்லாத்தைத் தழுவினார் என்றே கூறப்பட்டு வந்தது.( அரசாங்க மாலாய்க்காரர்களின் ஆதிக்கம் வலுப்பெற சரித்திர விஷயங்கள் பல மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளன என்பது காலத்தால் மறக்கப்படலாம்! உண்மை மௌனத்தில் வாழ்கிறதோ! ) அடியேன், ஆரம்பக் கல்வி பயிலும் போதே இத்தகைய சரித்திரத்தைத் திரித்து எழுதும் வழக்கம் இருந்துள்ளதை காலம் கடந்து தெரியவரும் போது, கல்வியாளன் என்ற அடிப்படையில் மிக வருந்தினேன்.

பரமேஸ்வரா மலாக்காவை நிறுவியதின் வழி அதுவே முதல் மலாய் அரசு என்று எங்களூர் சரித்திரம் பகர்கின்றது! இருப்பினும், அன்றைய காலத்தில் மலாக்கா ஒரு வாணிக மையமாய் விளங்கியது. பல நாட்டு மக்கள் அங்கு வாணிகம் புரிய வந்தனர். அரேபியா, இந்தியா முதலான நாடுகளிலிருந்து அதிகமான முஸ்லீம் வியாபாரிகள் இங்கு வந்தனர். அதன் காரணமாக மலாக்காவின் அரசன் முஸ்லீம் ஆனான்; அங்குள்ள மக்களும் முஸ்லீம்கள் ஆனார்கள். இஸ்லாம் அங்கு ஆட்சி மதமாயிற்று.

அப்படியானால், அதற்கு முன்பு எத்தகைய ஆட்சி முறை இருந்திருக்கும் என்பதை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

அந்த காலக்கட்டத்தில், பல மொழிகள் பேசிய மக்கள் அங்கு வாணிகம் புரிந்தனர். மலாக்கா ஒரு முக்கிய வானிகத் தளமாக விளங்கிற்று. எனினும் மலாய் மொழியே பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருந்ததாகக் கூறப்பட்டுவருகிறது. எனினும், அம்மொழிக்கு குறிப்பிடத்தக்க வரிவடிவம் இல்லாதது வியப்பில் ஆழ்த்துகிறது. மலாய் மொழியின் தந்தை என்று போற்றக்குடிய முன்ஷி அப்துல்லா (Munshi Abdullah ) என்பவரின் பூர்வீகம் இந்தியா என்பதும் அவர் ஒரு தமிழர் என்பதும் சரித்திரத்தில் இருட்டடிக்கப்பட்ட உண்மை!

எது எப்படியிருந்தாலும், அன்று முதல் ( இடையே போர்த்துகீஸியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், ஜப்பானியர், மீண்டும் ஆங்கிலேயர்கள் போக) இன்று வரை மலாய் மொழியே பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் விளங்குகிறது.

இஸ்லாமிய செல்வாக்கு மலாக்காவில் பரவியவுடன் வாணிகமும் அதிகரித்தது. மக்கள் தொகை பெருகியது. எனவே சட்டமும் ஒழுங்கு முறையும் ஏற்படுத்தப்பட்டன. ஆட்சி நிர்வாகம் முறையாக நடைபெற சுல்தானுக்கு உதவியாகத் திறமைமிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் சுல்தானுக்கு உதவியாக இருந்து நல்லாட்சி புரிந்தனர்.

'பெண்டஹாரா' என்னும் பொறுப்பு வகித்த அதிகாரி சுல்தானின் நேரடி உதவியாளராக, ஆட்சிக் குழுவின் தலைவராக விளங்கினார். 'பெண்டஹரி' எனும் பதவியில் இருந்தவர் நிதியாளராக இருந்து பொருளாதாரத்தைக் கவனித்து வந்தார். 'தெமெங்கோங்' எனும் பதவி வகித்தவர் சட்ட திட்டங்களை அமல்படுத்தும் காவல்துறை அதிகாரியாக விளங்கினார். 'ஷா பந்தார்' என்னும் பதவி வகித்தவர் துறைமுக அதிகாரியாகவும், 'இலக்சுமணா' எனும் பதவி வகித்தவர் கடற்படைத் தளபதியாகவும் பொறுப்பேற்றுச் சுல்தானுக்கு உதவியாக ஆட்சி புரிந்துவந்தார்.

எங்கள் மலேசியா.


மலேசியா எங்கள் தாய்நாடு. எங்கள் மூதாதையர் இந்திய நாடிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள்தான். பெரும்பாலும் சஞ்சிக் கூளிகளாக

தருவிக்கப்பட்டவர்கள். அது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இருண்ட சரித்திரம். அதைப் பற்றி வேரொரு பதிவில் இடுகிறேன். இன்றைய
மலேசியா.....அன்று மலையகமாக இயற்கை சூழ்ந்திருந்ததால் மலாயா என்றழைக்கப்பட்டது.( மலையகம் ....பிறகு மலாய்க்காரர், 'மலாய்' மொழி என்று பெயர் உருவானதற்கு நெருங்கிய தொடர்பிருக்கிறது என்பதை ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு தெளிவு கிடைக்கும் )

முதலில், எழில் மிகுந்த எமது மலேசிய திருநாட்டைப் பற்றி சொல்லட்டுமா...? எங்கிருந்து ஆரம்பிப்பது ...சரி, அதன் அமைப்பில் இருந்து தொடங்குகிறேன்.

அழகிய மலேசியா- சிறந்த இயற்கை அமைப்பும், அழகும் ஒருங்கே பொருந்திய நாடு. மலேசியாவை, மேற்கு மலேசியா எனவும் கிழக்கு மலேசியா எனவும் நிலவியல் அடிப்படையில் பிரிக்கலாம். மேற்கு மலேசியாவின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்துள்ளது. எனவே, இது தீபகற்ப மலேசியா எனவும் அழைக்கப்படுகிறது. கிழக்கு மலேசியா கலிமந்தான் தீவில் உள்ளது. சபா, சரவாக் எனும் மலேசியாவின் இரு மாநிலங்கள் இங்குதான் உள்ளன. மலேசியாவின் நிலவியலைப் பல வகையாகப் பிரிக்கலாம். அவை மலைகள், மலைத்தொடர்கள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், சதுப்பு நிலக்காடுகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளாகும்.

மலைகலும் மலைத்தொடர்களும்:
மலேசியாவின் நீண்ட மலைத்தொடர் 'தித்திவங்சா' மலைத்தொடர் ஆகும். வடக்கில் தொடங்கி தெற்கு வரை படர்ந்திருக்கும் இது தீபகற்ப மலேசியாவில் உள்ளது. மலேசியாவின் உயரமான மலைத்தொடர் 'குரோக்கர்'( Crocker).இது சபா மாநிலத்தில் உள்ளது. மலேசியாவின் முல்லிய
மலைத் தொடர்களில் லேடாங் மலைத்தொடர், தாஹான் மலைத்தொடர், நாக்காவான் மலைத்தொடர், ஈரான் மலைத்தொடர் போன்றவை
குறிப்பிடத்தக்கவையாகும்.

மலேசிய மலைப்பகுதிகளில் தேயிலை மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. பல்வகை பூச்செடிகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி, மலைப் பிரதேசங்களில் உள்ள உல்லாசத் துறையை ஊக்குவிக்கின்றன. இவற்றால் நாட்டிற்கு நல்ல வருவாய் கிடைக்கின்றது.
உதாரணத்திற்கு கேமரன் மலை, கெந்திங் மலை உல்லாசத் தளங்களைச் சொல்லலாம்.

சமவெளிகள்:
மலேசியாவில் பெரும்பாலும் பயிர்த்தொழில்கள் சமவெளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கெடா ( கடாரம் ஆண்ட இராஜேந்திர சோழன் ஞாபகம் வருகிறதா ) மாநிலத்தின் மூடா சமவெளி மிகவும் பெரியது. இங்கு அதிகமாக நெற்பயிரிடப்படுவதால் இச்சமவெளியை மலேசியாவின்
'நெற்களஞ்சியம்' என்று அழைப்பர்.

கிளந்தான் மாநில ஆற்றோரப் பகுதிகளும் சிலாங்கூர் மாநிலத்தின் சபாக் பெர்ணாம் பகுதியும் பயிர்த்தொழிலுக்கு ஏற்ற சமவெளிகளாகும்.
மலேசியாவில் கிள்ளான் பள்ளத்தாக்கும் கிந்தா பள்ளத்தாக்கும் முக்கியமானவையாகும். மலேசிய மக்கள் தொகையில் அதிகமானோர் இங்குதான் வாழகின்றனர். பல பட்டணங்கள் இப்பள்ளத்தாக்குகளில் உருவாகியுள்ளன. கிந்தா பள்ளத்தாக்கு முன்பு உலகிலேயே அதிக அளவில் ஈயம் தோண்டப்பட்ட பகுதியாகும்.

கடற்கரைப் பகுதிகள்:
மலேசியாவின் கடற்கரைப் பகுதிகள் மிகவும் அழகானவை; பிரசித்திப் பெற்றவை. உலகமெங்கிருந்தும் சுற்றுப்பயணிகளைக் கவரும் இடங்களில்
மலேசியக் கடற்கரையும் அடங்கும். அவை கிளந்தானில் 'ச்சாகாயா பூலான்' (Cahaya Bulan) கடற்கரை, பினாங்கில் பத்து பெர்ரிங்கி (Batu Peringgi)
கடற்கரை, லங்காவியில் பந்தாய் பாசீர் பூத்தே (Pantai Pasir Putih) கடற்கரை, நெகிரி செம்பிலானில் 'போர்ட்டிக்சன்' கடற்கரை போன்றவை அடங்கும்.
சதுப்பு நிலக்காடுகள்:மலேசியாவின் சில பகுதிகளில் சதுப்பு நிலங்களைக் காணலாம். சதுப்பு நிலங்களில் காண்டா மரக்காடுகள் நிறைந்துள்ளன. மலேசியாவில் ஜொகூர் மாநிலத்திலுள்ள எண்டாவ், ரொம்பின் பகுதிகளிலும் சிலாங்கூர் மாண்-இலத்திலுள்ள கோலாடிலாங்கூரிலும், சபா மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும், சரவாக் மாநிலத்தின் தென்மேற்கு கரையோரத்திலும் சதுப்பு நிலங்கள் உள்ளன.

மலேசியா, பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால் 'பூமத்திய ரேகை' வாநிலையைக் கொண்டுள்ளது. வெப்பநிலை - ஆண்டு முழுதும் உயர்ந்தே
காணப்படுகிறது ( 26'C - 28'C ). இங்கு ஆண்டு முழுதும் மழை பெய்யும்.இருப்பினும் பருவ மழைக்காலங்களில் பெரும் மழை பெய்யும். பருவக் காற்றானது - வடகிழக்குப் பருவக்காற்று -( நவம்பர் முதல் மார்ச் வரை ) / தென்மேற்கு பருவக் காற்று - ( மே முதல் செம்டம்பர் வரை).

பல்லின மக்கள் வாழும் நாடு மலேசியா. இங்கு மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், பழங்குடியினர் மற்றும் பலர் 'ஒற்றுமையாக' வாழ்ந்து
வருகின்றனர். பல இன மக்களின் பல்வேறு கலை, கலாச்சாரங்கள் மலேசியாவுக்குத் தனித்தன்மையைத் தருகின்றன.

================

உலகளவில் எம்மொழியைப் பேசினாலும், இல்லத்தில் தமிழ் மொழியே பேசுவோம்!

உலகத் தாய் மொழி நாள் தொடர்பான கட்டுரைத் தொகுப்பு.[ யுனேஸ்கோ மன்றம் 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் ஆலோசனை நடத்தி பிப்ரவரி 21-ஆம் நாளை உலகத் தாய் மொழி தினமாக அறிவித்துள்ளது. " எந்த நாட்டில் வாழ்கின்ற மக்களாக இருந்தாலும் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தம் கருத்தை உறுதியாக எடுத்துரைக்கவும் பாரம்பரிய பண்பாட்டைப் பேணவும் இன ஒற்றுமைக்கும் கருவியாக அமைவது தாய் மொழி ஒன்றுதான்".]
======================================================

கடந்த 21.02.2008 அன்று உலகத் தாய் மொழி நாள். யுனேஸ்கோ எனப்படும் 'ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல்,பண்பாட்டுக் கழகம்' அறிவித்துள்ளபடி உலகிலுள்ள அனைத்து மக்களும் தம் தாய் மொழியை கொண்டாடுகிறார்கள். உலகில் சுமார் 6,000 முதல் 7,000 வரைக்குமான மொழிகளில் எறக்குறைய பாதிக்கும் மேற்பட்டவை வழக்கழியும் நிலையை எதிர்நோக்கியுள்ளன. குறிப்பிட்டுச்சொன்னால், சிறுபான்மை மக்களால் பேசப்படும் மொழிகள்தாம் அத்தகைய நிலையை எதிர் கொண்டுள்ளன.

ஏன் இத்தகு நிலை ? அந்த மொழி பேசும் மக்கள் தாய்மொழிப்பற்று இல்லாமைதான் முழுமுதற் காரணம். உதாரணத்திற்கு, பண்டைய இலக்கிய வளமும், செழுமையும் கொண்டிருந்த கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகள் இன்று இல்லாமல் போனதற்கு அன்றைய மக்கள் தாய்மொழி உனற்வின்றி இல்லாததே காரணம் ஆகும்.

உலக வரலாற்றுச் சுவடுகளைத் திரும்பிப் பார்க்கும் பொழுது தாய் மொழிக்காக நாடு சமைத்த வங்க மக்களின் மொழி வேட்கையும் தாய்மொழிப் பற்றும் இணையில்லாதது; ஈடற்றது. பிரெஞ்சு மொழியினரும்
ஜெர்மனியாளர்களும் கூட தாய் மொழிப் பற்று மிக்கவர்கள். தட்டுத் தடுமாறியேனும் தம் மொழியில்பேசுவோரைக் கண்டு பிரெஞ்சு மக்கள் உள்ளம் உவகை அடைகின்றனர்.

ஆங்கில மொழி வாடையின்றியே அறிவியல் சாதனை படைத்து வரும் ரஷ்யா, ஜப்பான், சீன மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டோரும் உலகில் போற்றத் தகுந்தவர்கள்.

மலேசிய மக்களின் தேசிய மொழியாக பவனி வரும் 'பஹாசா மலேசியா' ( முன்பு 'பஹாசா மெலாயு' என்றழைக்கப்பட்டது ) வழி 'பஹாசா ஜீவா பங்சா' (மொழியே இனத்தின் உயிர் - எனப் பொருள்படும்) என்பதை கொள்கை-பண்பாடு அடிப்படையில் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ள மலாய் மக்களின் மொழி ஆர்வமும் போற்றத்தகுந்ததுதான்.

இதையெல்லாம் எண்ணிப் பார்த்து மலேசியத் தமிழ் மக்கள் அனைவரும் தம் தாய் மொழி மீது மங்காத பற்றும் மாறாத ஈடுபாடும் கொண்டு திகழ வேண்டும்.

மலேசியத் தமிழர்களிடையே குறிப்பாகத் தமிழ் இளைஞ்ர்களிடையே தமிழார்வம் தற்பொழுது வெகுவாக குன்றியுள்ள நிலையை மாற்றியமைக்க தமிழ்ச் சார்ந்த இயக்கங்கள் ஆவன செய்ய வேண்டும்.

மலேசியத் தமிழ் இளைஞ்ர் மணிமன்றம் தோற்றுவித்த காலத்தில் தமிழ் மொழியார்வம் செழித்து வளர்ந்தது. தமிழ் நெஞ்சர்களின் சீரிய வழிகாட்டுதலுடன் அன்று பட்டி தொட்டியெல்லாம் தமிழ் மொழி, கலை, பண்பாடு தொடர்பான நிகழவுகள் நடைபெற்றன. தமிழ் இளைஞர் மணி மன்ற வித்தகர், அமரர் கோ.சா அவர்களின் விழுமிய தமிழ்ச் சேவை- தமிழ் உணர்வு இன்று இருக்கிறதா என்றால் கேள்விக் குறியே!

"தாய்மொழி வழி முன்னேற்றம் காண மலேசியத் தமிழ் இளைஞர்கள் மணிமன்றப் படை களம் காண வேண்டும்' என்று தாய்மொழி குறித்து மன்றத்தின் தேசியத் தகைவர் திரு.பி.பொன்னையா அவர்கள் கூறியுள்ளார்.

தாய்மொழியும் சமயமும் இரு விழிகளுக்கு ஒப்பாகும் என்று மலேசிய இந்து தர்ம மாமன்ற தேசியத் தலைவர் இணைப்பேராசிரியர் என்.எஸ்.இராஜேந்திரன் அவர்கள் தாய்மொழி தினம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் சாரம்சம், " தமிழ்ர்க்குத் தாய் மொழி தமிழும் சமயமும் இரு விழிகள் போன்றவை. நன்னெறி சார்ந்த வாழ்க்கைக்கு சமயத் தெளிவு வேண்டும். அந்தச் சமயத் தெளிவு தாய் மொழி வழி பெற வேண்டும். இந்நாளில் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் தாய் மொழி தினத்தில் தமிழ் வளர்ச்சி மீது தமிழர்கள் கருத்துற வேண்டும்" என்பதாகும்.

ஒன்றை மட்டும் இந்த உலகத் தாய் மொழி நாளில் நினைவில் கொள்வோம்; நிறைவேற்றுவோம்.

"உலகலவில் எம்மொழியைப் பேசினாலும், இல்லத்தில் தமிழ் மொழியே பேசுவோம்!"

Saturday, February 23, 2008

நினைவுகள்- சிறுகதை பகுதி 1


அடடே....இவரும் சிறுகதை எழுத வந்துவிட்டாரே.....என்று எண்ணிவிடாதீர்கள்!

இச்சிறுகதை என் நண்பர், தமிழ் ஆர்வலர் திரு. பால.இளங்கோவன் என்பவரின் கன்னி முயற்சி. அவருக்கு ஆதரவு தரவேண்டும் என்ற எண்ணத்தாலும், அவர் மேலும் எழுதுவதற்கு இந்த வலைப்பு ஊடகம் உத்வேகத்தை வழங்கும் என்ற சிந்தனையாலுமே இந்த முயற்சி.

குறிப்பு: இச்சிறுகதை அவர் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

========================================================


"நினைவுகள்"- சிறுகதை - ஆக்கம் : பால. இளங்கோவன்( குளுவாங்,ஜொகூர், மலேசியா.)


========================================================

சூரியனின் முதல் கீற்று பூமியில் விழுவதற்கு இன்னும் ஏறக்குறைய மூன்று மணிநேரம் இருக்கும் இரவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு தன் கண்சிமிட்டும் பணியை சரியாகவே செய்து கொண்டுருக்கும், நட்சத்திர குவியல்களின் ராஜாங்க வேலை அது. மொத்தத்தில், பூமி இன்னும் தன் இரவு உறக்கத்திலிருந்து கண்விழிக்காத நிசப்த அதிகாலை நேரம். நிதர்சனமான நிசப்தத்தைச் சப்தமாக்கிக்கொண்டு இரயில் தனது பயணத்தை தெற்கிலிருந்து வடக்கே கோலாலம்பூர் மாநகரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

கிம்மாஸ்(Gemas) இரயில் நிலையத்தில் இருந்து அதிகாலைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த இரயில், ஜொகூரை நோக்கி தன் பயணத்தில் ஈடுபட்டிருந்த இன்னொரு இரயிலுக்கு முதல் வழிவிடும் பொருட்டு கிம்மாஸுக்கு அடுத்து உள்ள ஆயிர் கூனிங் (Air Kuning) என்னும் இடத்தில் நின்றது. வழக்கமாக எந்த விரைவு இரயிலும் அங்கு நிற்பது கிடையாது. ஆனால் தவிர்க்க இயலாத நிலையில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் இரயில் அங்கே நிற்கும், எப்போதாவது. இன்றும் அவ்வாறே நின்றது. புறப்பட்டு சிறிது நேரத்திற்கெல்லாம் இரயில் நின்றதைத் தொடர்ந்து ஒவ்வொரு பெட்டிகளிலும் இரவுக்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்த சில விழிகள் ஆங்காங்கு எழுந்து விடியல் இருட்டில் விழிகொண்டு ஊடிருவிக் கொண்டிருந்தன. சில மணித்துளிகளுக்குள், இரவு பயணத்திற்கு பொறுப்பு வகித்த பயண நிலைய அதிகாரி, இரயில் நின்றதற்கான காரணத்தை நடந்து கொண்டே பயணிகளுக்குத் தெரிவித்துக் கொண்டு ஒவ்வொரு பெட்டியாக கடந்து கொண்டிருந்தார்.

சங்க காலத்து இலக்கியங்களில், முரசொலி கேட்டு, புஜம் உயர்த்தி போருக்குக்கெழும் வீரனைப்போல், அதிகாலை நிசப்தத்தை, சத்தமாக்கிய அதிகாரியின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான், சங்கர். அதுவரை இருந்த அவனது ஆனந்த உறக்கம் அறுந்து விழுந்தது. இருந்தபோதும், அதிகாலை வேளையல்லவா, அக்னிக் குஞ்சின், அக்னி ஓமம் இன்னும் ஆரம்பிக்காத அமைதியான வேளை. கண்விழித்த சங்கர் மனமெங்கும், ஓர் ஆனந்தம்..மெல்லியதாய் படர்ந்து வியாபித்திருந்தது. அந்த இரவு இரயில் பயணத்தில் தற்காலிகத் தடையை முன்னிட்டு, தன் இருக்கையில் இருந்து எழுந்து நடந்து இரயில் பெட்டியின் கதவருகே வந்த சங்கர் பெட்டியின் கதவைத் திறந்தான். அதிகாலை சில்லென்று வீசிய குளிர்காற்று அவனது மிச்சம் மீதி இருந்த உறக்கத்தையும், அவனது உள்ளத்து சோர்வையும் வாரி எடுத்துச் சென்றது. பூமியில் புதிதாய் பிறந்த குழந்தை போல் ஆனது அவனது மனம், இரயில் பெட்டியில் இரு படிகளைத் தாண்டி இரயில் நிலையத்திற்கும், இரயில் வண்டிக்கும் இடையில் நடைபாதையில் கால் பதித்தான் சங்கர்.

தொடர்ந்து வீசிக் கொண்டிருந்த சில்லென்ற தென்றலில் முழுமையாகக் குளிர்ந்தான் சங்கர். உறக்கம் கலைந்ததும், அவனுக்கு நாவரட்சி ஏற்பட்டது. இரயில் நிலையத்தில் அப்படியொன்றும் இரவு நேரத்து டீ, காப்பிக் கடை இருப்பதற்கான சுவடுகள் எதுவுமே இல்லாமல் இருள் சூழ்ந்திருந்தது.

சுற்றும் முற்றும் மீண்டும் தன் பார்வையை அகலமாக்கினான். மனிதர்கள் நடமாட்டம் அறவே இல்லை. இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில், ஒரு வீடு, அந்த வீட்டில் ஆள் புலங்குவதற்கான அறிகுறிகள் இருப்பதை, இரவும் விடியலும் ஒன்றாக நலம் விசாரித்துக் கொள்ளும் அந்த அதிகாலை நேரத்தில் கண்டான். காலம் தாழ்த்தாமல் தன் தாகம் தீர்த்துக்கொள்ள அந்த வீடு நோக்கி நடந்தான், சங்கர். வீட்டுக் கதவைத் தட்டினான், ஹலோ! என்ற வார்த்தையுடன். யாரும் கதவைத்திறந்ததாக இல்லை. ஒரு வினாடி மௌனித்து மீண்டும் தட்டினான். அப்பொழுது யாரும் கதவைத் திறக்கவில்லை.

வாசலில் இருந்து பின்வாங்கினான். வீட்டின் பின்புறம் அந்த அதிகாலை........ ( தொடரும் )


Saturday, February 9, 2008

சிறந்த தலைவராக இருப்பதற்கு 7 தகுதிகள் - துன் டாக்டர் மகாதீர் கருத்து.



தலைவர்களாக வரக்கூடியவர்கள் நற்பண்புகளுடன் இருக்க வேண்டும். அவர்கள் சாதனை படைக்காமல் இருந்தாலும் நல்ல குணமுள்ளவர்களாக இருந்தால் போதும் என மலேசிய முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் அவர்கள் கருத்துரைத்துள்ளார்.


அவர் மேலும், நன்னெறியில்லாமல், ஆக்ரோஷமான முறையில் தலைவர்களாக வர வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.


மலேசியாவில் தலைவருக்கான நன்னெறியுள்ள ஆயிரம் தலைவர்கள் இருக்கலாம். ஆனால், அவர்கள் வெற்றி பெறாததற்கு காலம் அவர்களுக்கு சாதகமாக இல்லாமல் இருந்திருக்கலாம். அதே நேரத்தில் ஒருவர் நற்பண்புகள் இல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கு தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சமீபத்தில் 'பெர்னாமா'வுக்கான செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


ஒருவர் சிறந்த தலைவராக இருப்பதற்கு 7 தகுதிகளை துன் மகாதீர் பட்டியலிட்டார்.


1. ஒரு சிறந்தத் தலைவர் தன்னடக்கமாக இல்லாவிட்டாலும் பெரிதாக பேசக்கூடாது.


2. ஒருவர் தன் பொறுப்புகளை ஏற்று மேற்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஆனால், தலைமைத்துவத்தில் நெருக்குதல், கடுமை இருக்கக்கூடாது.


3. ஒருவர் தனது தோல்விக்கு அடுத்தவரை குறை சொல்லக்கூடாது. தனது பலவீனத்தை ஒப்பு கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். குற்றஞ்சொல்வதற்கு அடுத்தவரை சுட்டிக் காட்டக்கூடாது.


4. அவர் புகழுக்கு மயங்காமல் கண்ணியமாக இருக்க வேண்டும்.


5. அவர் தனது ஆதரவாளர்களைக் கையாள தெரிந்திருக்க வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து மதிப்பளிக்க வெண்டும்.


6. மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். முன் மாதிரித் தலைவராக இருக்க வேண்டும்.


7. அவரது தலைமையின் கீழ் செயல்படுபவர்களுடன் ஒப்பிடுகையில் அவர் ஆற்றல்மிக்கவராகத் தலைவராக இருக்க வேண்டும்.


ஒரு சில முன்னணி நாடுகள் முன்னேற்றத்திற்கு ஒரு தலைவரின் சிறந்த ஆட்சி முறைதான் காரணம். ஒரு நாட்டுக்கு நல்ல தலைவர் இல்லை என்றால் சிறந்த ஆட்சி இருக்காது. நிறைந்த ஆட்சி இல்லை என்றால் மக்கள் அந்த ஆட்சியை விரும்பமாட்டார்கள் என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கருத்துரைத்துள்ளார்.


-நன்றி 'பெர்னாமா'
பி.குறிப்பு:டும்...டும்...டும்..... மலேசியாவில் மிக விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது!

இன்பமாக வாழ என்ன செய்யலாம்..?

சாதாரணமாக மனிதனுடைய உள்ளத்திலே ஒரு நிறைவு வேண்டும். அந்த நிறைவிலிருந்து பெறக்கூடியதுதான் இன்பமான வாழ்க்கை. உண்மையில், மனிதனுக்கு வறுமை என்பது இல்லை. மேம்போக்காக எடுத்துக்கொள்ளாமல், சற்று ஆழ்ந்து யோசித்தால் இவ்வுண்மை புலப்படும். இப்புவியில் பிறந்த ஒரு மனிதனுக்கு இயற்கையிலேயே, அவனது இறுதி காலம் வரையிலும் எல்லா வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மனிதன் ஒருவரைப் பார்த்து அவரைப்போல் நாம் இல்லையே என்று நினைத்து தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு துன்புறுகிறான். அவன் தன்னிடம் உள்ள ஆற்றலை உணர்ந்து, வளர்த்துக் கொள்ளும் திறமை பெறாமையும், செயல்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிட்டாமையுமே, சோர்வு, விரக்தி, வறுமை உண்டாவதற்குரிய காரணங்களாகும்.

மனத்தை அலைபாய விடுவது, அதைக் கட்டுபாட்டில் வைக்காமல் தேவையில்லா தாழ்வு எண்ணங்களையும், எதிர்மறையான விசயங்களையும் தேக்கி களங்கப்படுத்திக் கொண்டும், தனக்குத் தானே ஒரு எல்லை கட்டிக் கொண்டும், அதிலேயே மனதைச் சிக்க வைத்துக் கொண்டும் அங்கலாய்ப்பதாலேயே 'மனநிறைவு' எற்படாமைக்கு மற்றொரு காரணம்.

இதிலிருந்து எவ்வாறு விடுபடுவது..?

முதலில் இயற்கையை நேசியுங்கள். இயற்கையுடன் பேசுங்கள்; ஒன்றித்து விடுங்கள். சுருக்கமாச் சொன்னால், இயற்கை லயத்துடன் வாழ்வை ஓட்டுங்கள். இயற்கையுடன் பேசுவதா...? ஆம். மனதுடன் பெசுவது ஒரு கலை. தற்கருத்தேற்றம் வழி நேர்மறை எண்ணங்களை சுலபமாக மனதிடம் போட்டு வைத்தால் அது பாட்டுக்கு வேலையைச் செய்யும். சுயமுன்னேற்றப் பயிற்சிகளிலோ அல்லது புத்தகங்களில் படித்தோ இருப்பீர்கள்.

சற்றேரக்குறைய அதே போல்தான். நம்மைச் சுற்றி இந்த இயற்கையிடம் பேசுவதும் ஒரு கலைதான். சரி, நான் பேசுகிறேன்; இயற்கை பேசுமா...? என்றால் அதற்குப் பதில் நீங்கள் எவ்வளவு தீவிரமுடன் இயற்கையுடன் இணைகிறீர்கள் என்பதில் இருக்கிறது. சும்மா ஒரு வாரத்திற்கு ....இயற்கைப் பிரதிநிதிகளான மண்,நீர்,காற்று,நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் ஆரம்பியுங்கள்.

இயற்கையானது ஆயிரமாயிரம் இன்பங்கள் உள்ளடக்கியுள்ள ஒரு கூட்டமைப்பு என்பதை நன்றாக உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை. உயர்வு உங்கள் சிந்தையில் ஆரம்பிக்கட்டும். முயற்சி செய்துதான் பாருங்களேன்.....இயற்கயின் பதில் கிடைத்தால் அதற்கென்றே ஒரு தனி 'வலைப்பூ' ஆரம்பிப்பீர்கள்!